தேனி, பிப். 21: தேனி புதிய பஸ்நிலையத்தில், தமிழக அரசின் அம்மா குடிநீர் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதால், பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தேனியில் புதிய பஸ்நிலையம் நகரில் பைபாஸ் ரோட்டில் உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தேனிக்கும், தேனி வழியாக செல்லும் அனைத்து பேருந்துகளும், தேனி புதிய பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றன. இந்த பஸ் நிலையத்தில் சுமார் 50க்கும் அதிகமான வணிக கடைகள் உள்ளன. இக்கடைகளில் தனியார் நிறுவன குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், தமிழக அரசின் அம்மா குடிநீர் பாட்டில்கள் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் மூலம், பஸ்நிலையத்தில் விற்பனை செய்யப்பட்டது. ரூ.10க்கு விற்கப்படும் இந்த குடிநீர் பாட்டில்களை பயணிகள் வாங்கி வந்தனர்.