தொளவேடு கிராமத்தில் குண்டும் குழியுமான தார்சாலை

ஊத்துக்கோட்டை, பிப். 21: ஊத்துக்கோட்டை  அருகே தொளவேடு கிராமத்தில் உள்ள தார்சாலை குண்டும் குழியுமாக மாறியுள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஊத்துக்கோட்டை  அருகே தொளவேடு கிராமத்தில் அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், விவசாயிகள், மாணவ-மாணவிகள் என சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள், வேலைக்கு செல்வதற்கும், விவசாயிகள் கோயம்பேட்டிற்கு பூ, காய்கறி போன்றவற்றை எடுத்து செல்வதற்கும், மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்வதற்கும் தொளவேடு   கிராம சாலையை பயன்படுத்தி தண்டலம், பாலவாக்கம் பகுதிகளுக்கு   சென்று அங்கிருந்து சென்னை,  திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் தொளவேடு  கிராம சாலை குண்டும், குழியுமாக மாறி படுமோசமாக காணப்பட்டது. இதையறிந்த அப்பகுதி மக்கள் புதிதாக சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன்படி, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைத்தனர்.

ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்  பெய்த மழைக்கு  கிராம சாலை  குண்டும் குழியுமாக மாறி பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் இருசக்கரம், ஆட்டோ, டிராக்டர் போன்ற வாகன ஓட்டிகளும், பள்ளி வாகனங்களும் செல்ல  மிகவும் சிரமப்படுகிறார்கள். இரவு நேரத்தில் கீழே விழுந்து காயமும் ஏற்படுகிறது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘‘எங்கள் கிராமத்தில் 5 வருடத்திற்கு முன்பு சாலை அமைத்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்  பெய்த மழைக்கு  இந்த சாலை குண்டும் குழியுமாக மாறிவிட்டது. அதை சீரமைக்கவில்லை. இதனால்,  சாலை மிகவும் மோசமாக காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல்   இரவு நேரத்தில் வாகனங்களை ஓட்ட முடியவில்லை.  எனவே, கிராம  சாலையை சீரமைக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: