கொடைக்கானலில் முன்விரோதத்தில் டாக்ஸி டிரைவருக்கு சரமாரி வெட்டு ஒருவர் கைது

கொடைக்கானல், பிப். 21: கொடைக்கானலில் முன்விரோதத்தில் டாக்ஸி டிரைவரை சரமாரிய வெட்டிய நபரை போலீசார் கைது செய்தனர். கொடைக்கானல் நாயுடுபுரத்தை சேர்ந்தவர் ராஜாமணி. அப்பகுதி டாக்ஸி ஸ்டாண்ட் அமைப்பின் துணைத்தலைவராக உள்ள இவர் சொந்தமாக டாக்சி வைத்து ஓட்டி வந்தார்.கொடைக்கானல் ரைபிள் ரேஞ்ச் ரோடு பகுதியை சேர்ந்த சந்திரமோகன் (48) என்பவரும் இதே ஸ்டாண்டில் டாக்ஸி ஓட்டி வந்தார். சந்திரமோகன் குடித்து விட்டு வந்து ஸ்டாண்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.இதனால் ராஜாமணி, சந்திரமோகனை இந்த ஸ்டாண்டில் டாக்ஸி ஓட்டக்கூடாது என விலக்கி வைத்துள்ளார். இதில் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் ராஜாமணி ஸ்டாண்டில் தனது டாக்ஸியை நிறுத்தி விட்டு சுற்றுலா பயணிகளை தேடி சென்றுள்ளார். அப்போது அவ்வழியே வந்த சந்திரமோகன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜாமணியை வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அவரை சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் ராஜாமணியை மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ராஜாமணி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிந்து சந்திரமோகனை கைது செய்தனர்.

Related Stories: