தர்மபுரி, பிப்.21: தர்மபுரி அருகே பிக்கிலி மலை கிராமத்திற்கு நேற்றிரவு இயக்கப்பட்ட பஸ்கள் அடுத்தடுத்து பழுதாகி நடுவழியில் நின்றதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.தர்மபுரி நகர பஸ் ஸ்டாண்டிலிருந்து பாப்பாரப்பட்டி பிக்கிலி மலைக்கிராமத்துக்கு டவுன் பஸ்(12 சி) இயக்கப்பட்டு வருகிறது. நேற்றிரவு 7.30 மணிக்கு வழக்கம்போல் பஸ் புறப்பட்டுச் சென்றது. கடைசி டிரிப் என்பதால் கூட்டம் நிரம்பி வழிந்தது. 50க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்சில் இருந்தனர். நகர பஸ் ஸ்டாண்டிலிருந்து புறப்பட்டு நான்கு ரோடு ரவுண்டானாவை கடந்து, கிருஷ்ணகிரி சாலையில் உள்ள நகர அரசு போக்குவரத்துக கழக பணிமனை முன் சென்றபோது திடீரென பஸ் பழுதடைந்து நின்றது. பஸ்சை ஸ்டார்ட் செய்ய முயன்றும் முடிய வில்லை. இதனால், பயணிகள் நடுவழியில் தவித்தனர். குறிப்பிட்ட நேரத்திற்கு வீடுபோய் சேர்ந்து விடுவோமா என அச்சமடைந்தனர். இதையடுத்து, மாற்றுப் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. உடனே, அந்த பஸ்சில் அனைவரும் அடித்து பிடித்து ஏறி பயணம் செய்தனர். ஆனால், பழைய தர்மபுரி வளையில் சென்றபோது அந்த பஸ்சும் பழுதடைந்து நடுவழியில் நின்றது. இதனால், அனைவரும் கீழே இறக்கி விடப்பட்டனர். அப்போது, அந்த வழியாக பாப்பாரப்பட்டிக்கு சென்ற மற்றொரு பஸ்சில் பயணிகள் ஏறினர். ஆனால், அதில் பாப்பாரப்பட்டிக்கு சென்றால், அங்கிருந்து பிக்கிலி மலை கிராமத்திற்கு பஸ் வசதி கிடையாது. இதனால், பயணிகள் செய்வதறியாது தவித்தனர்.