ஓசூரில் பரபரப்பு ரவுடி மனைவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி

ஓசூர், பிப்.21: ஓசூரில் ரவுடி மனைவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றவழக்குகள், ஓசூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில்  நிலுவையில் உள்ளது. இந்நிலையில், ஓசூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த திமுக சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் மன்சூர்அலி கொலை வழக்கிலும் இவர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்த போலீசார், இவரை விசாரணைக்கு அழைத்துள்ளனர். ஆனால், ராதாகிருஷ்ணன் விசாரணைக்கு செல்லாமல் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார், அவரது வீட்டுக்கு சென்று, ராதாகிருஷ்ணனனின் மனைவி மரகதம்(41) மற்றும் மகன் சுந்தர்(23) ஆகிய இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மரகதம், போலீசார் தொடர்ந்து டார்ச்சர் செய்து வருவதாக கூறி, நேற்று வீட்டில் இருந்த பூச்சிமருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, ராதாகிருஷ்ணன் ஒசூரைச்சேர்ந்த ஒரு நபரை, பணத்திற்காக கடத்தி சென்றதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையிலும், மரகதம் மற்றும் சுந்தரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதன் அடிப்படையிலேயே, மரகதம் பூச்சி மருந்து குடித்ததாக கூறப்படுகிறது.

Related Stories: