பேருந்து நிலையம் பின்புறம் பரபரப்பு அரிவாளுடன் மர்ம நபர்கள் தாக்குதலில் ஓட்டல் சூறை

கரூர், பிப். 21: கரூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள உணவகத்தில் மர்ம நபர்கள் புகுந்து சூறையாடினர். அரிவாள் போன்ற ஆயுதங்களால் தாக்கியதால் 5 பேர் படுகாயம் அடைந்தனர். கரூர் பேருந்து நிலையம் பின்புறம் பேருந்துகள் வெளியேறும் இடம் அருகே தனியார் சைவ அசைவ உணவகம் உள்ளது. இங்கு நேற்று பிற்பகல் 1 மணியளவில் மர்மநபர்கள் அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் புகுந்தனர். அங்கிருந்தவர்களை தாக்கினர். இதனால் உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர். பேருந்து நிலைய பகுதிக்கு சென்றவர்களும் அச்சம் அடைந்து அங்கிருந்து சென்றனர். தாக்கிய நபர்களும் ஓடி விட்டனர். உணவகத்தை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அண்டனூரை சேர்ந்த இளையராஜா(33) என்பவர் நடத்தி வருகிறார். இவரும் காயம் அடைந்தார். மேலும் இங்கு வேலை செய்யும் ஊரணிபுரம் மணி(27) அண்டனூர் பிரவின்(19), ஆவுடையார்கோவில் துரை(20), புதுக்கோட்டை மாவட்டம் சின்னதுரை(45) ஆகியோர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கரூர் டவுன் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். கடையில் வேலை செய்யும் ஒருவர் மளிகை வாங்க சென்றபோது அங்கு லோடு இறக்கிய லாரியின் கதவு அவர் மீதுபட்டு காயம் அடைந்து ரத்தம் வந்துள்ளது.இந்த சம்பவம் நடைபெற்ற சில மணி நேரத்தில் கடையை அடித்து நொறுக்கிய சம்பவமும் நடைபெற்றுள்ளது.மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பட்டபகலில் அதுவும் பேருந்து நிலையத்தில் உணவகத்தை சூறையாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பைஏற்படுத்தியது.

Related Stories: