ஊட்டி, பிப். 21: நீலகிரி மாவட்டத்தில் தென்னை, பாக்கு மரங்களில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ பூச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென்னை மற்றும் பாக்கு மரங்களில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ எனும் பூச்சியின் தாக்குதல் சமீப காலமாக கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தஞ்சை மற்றும் கடலூர் போன்ற மாவட்டங்களில் காணப்படுகிறது. வயது முதிர்ந்த பெண் வெள்ளை ஈக்கள், மஞ்சள் நிற முட்டைகளை ஓலைகளின் அடிப்பாகத்தில் இடுகின்றன. இம்முட்டைகளில் இருந்து வெளியே வரும் இளம் குஞ்சுகள், இலைகளின் சாற்றினை உறிஞ்சி வளர்கின்றன. சுமார் 20 முதல் 30 நாட்களில் முழு வளர்ச்சியடைந்து ஈக்களாக மாறி கூட்டமாக தென்னை ஓலைகளின் அடிப்பகுதியில் காணப்படுகின்றன. இவைகள் காற்றின் திசையில் எளிதில் பரவி அடுத்தடுத்த தோட்டங்களில் உள்ள தென்னை மற்றும் பாக்கு மரங்களில் பாதிப்ைப ஏற்படுத்தி வருகின்றன.
இதனை கட்டுப்படுத்த, மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களில் ஆமணக்கு எண்ணை தடவிய ஒட்டும் பொறிகளை ஏக்கருக்கு 10 என்ற எண்ணிக்கையில் 5 முதல் 6 அடி உயரத்தில் ஆங்காங்கே கட்டி வைத்தால் வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்க முடியும். மேலும், மஞ்சள் விளக்கு பொறிகளை ஏக்கருக்கு 2 வீதம் தென்னை மற்றும் பாக்கு தோப்புகளில் அமைத்து மாலை வேளைகளில் 6 மணி முதல் 11 மணி வரை ஒளிரச் செய்வதன் மூலமும் வெள்ளை ஈக்களை அழிக்கலாம். மேலும், தென்னை, பாக்கு மரங்களின் இலைகளின்மேல் தெளிப்பான்களை கொண்டு வேகமாக நீரை அடிப்பதன் மூலம் வெள்ளை ஈக்கள் மற்றும் கரும பூசனங்களை அழிக்கலாம். வெள்ளை ஈக்கள் அதிகளவு பரவும்போது பொறிவண்டுகள், என்கார்சியா ஒட்டுண்ணிகள் போன்ற இயற்கை எதிரிகள் தோப்புகளிலேயே இயற்கையாகவே உருவாக ஆரம்பிக்கும். என்கார்சியா ஒட்டுண்ணிகள் அதிகளவு உருவாகி வெள்ளை ஈக்களின் சேதத்தை பெருமளவு குறைக்கும். அதிகளவு பூச்சிக் கொல்லிகள் உபயோகிக்கும்போது நன்மை செய்யும் இயற்கை எதிரிகள் அழிந்து விடுவதால் ரசாயன பூச்சிக்கொல்லிகளை கண்டிப்பாக தவிர்த்து இயற்கை எதிரி பூச்சிகள் வளர்வதற்கு உரிய சூழலை மேம்படுத்துவது சிறந்ததாகும். எனவே, தென்னை மற்றம் பாக்கு விவசாயிகள் இந்த வழிமுறைகளை பின்பற்ற ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதலில் இருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியுள்ளார்.