தோட்டத்தில் சுற்றித்திரிந்த மரநாய் குட்டி காராச்சிக்கொரை கால்நடை மையத்தில் பராமரிப்பு

சத்தியமங்கலம், பிப்.21: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் விவசாய தோட்டத்தில் சுற்றித்திரிந்த அரிய வகை உயிரினமான மரநாய்க்குட்டி வன கால்நடை மையத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் சுற்றித்திரிந்த மரநாய்க்குட்டியை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு பவானிசாகர் அருகே உள் காராச்சிக்கொரை வன கால்நடை மையத்தில் ஒப்படைத்தனர். பிறந்த சில மாதங்களே ஆன மரநாய்க்குட்டியை கால்நடை மைய மருத்துவர் அசோகன் மற்றும் உதவியாளர்கள் பராமரித்து வருகின்றனர். மரங்களில் வாழும் தன்மை உடைய மரநாய்கள் தென்னை மரங்களில் முகாமிட்டு இரவு நேரத்தில் மட்டும் இரை தேடும் பழக்கம் உள்ளதாகும். பகல் நேரத்தில் உறங்கும் மரநாய்கள் எளிதில் மனிதர்களின் கண்ணுக்கு புலப்படாது.

தென்னை மரத்தில் உள்ள இளநீரை தனது கூரிய பற்களால் துளை போட்டு குடித்துவிடும். மரநாய்கள் அரிய வகை உயிரினங்களாக பட்டியலிடப்பட்டு வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972ன்படி பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சத்தியமங்கலம் வன கால்நடை மையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் மரநாய்க்குட்டி தனது தாயை பிரிந்ததால் இரை தேடும் வரை வளர்க்கப்பட்டு பின்னர் வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்படும் என தெரிவித்தனர். தற்போது மரநாய்க்குட்டிக்கு உணவாக பால் கொடுக்கப்படுகிறது.

Related Stories: