வெளிமாநில வியாபாரிகள் குவிந்ததால் கருங்கல்பாளையம் சந்தையில் மாடு விற்பனை களைகட்டியது

ஈரோடு, பிப்.21: ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் குவிந்ததால் மாடு விற்பனை நேற்று களைகட்டியது. ஈரோடு கருங்கல்பாளையம் காவேரி செக்போஸ்ட் அருகே வாரந்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டு சந்தை நடைபெறும். இதில், புதன்கிழமை வளர்ப்பு மாடுகளும், வியாழக்கிழமை கறவை மாடுகளும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சந்தைக்கு ஈரோடு மட்டுமல்லாமல் சுற்றுப்புற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களது மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவர்.வாரந்தோறும் சராசரியாக 800 மாடுகளுக்கு மேல் வரத்தாகும். மாடுகளை வாங்க பிற மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து செல்வர். இந்நிலையில், நேற்று கூடிய சந்தையில் கடந்த வாரத்தை காட்டிலும் கொஞ்சம் கூடுதலான மாடுகள் வரத்தானது. மாடுகளை வாங்க கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளிமாநில வியாபாரிகள் குவிந்ததால் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.இதுகுறித்து மாட்டு சந்தை உதவி மேலாளர் ராஜேந்திரன் கூறுகையில்,`இந்த வாரம் கூடிய சந்தையில் பசு-375, எருமை-150, கன்று-175 என மொத்தம் 700 மாடுகள் வரத்தானது. வெளிமாநில வியாபாரிகள் மாடுகளை வாங்க அதிகளவில் வந்ததால் வரத்தான மாடுகளில் 80 சதவீதம் விற்பனையானது’ என்றார்.

Related Stories: