குலசேகரம் அருகே பெண்ணை பைக்கில் இருந்து தள்ளிவிட்டு செயின் பறிப்பு

குலசேகரம், பிப்.21: குலசேகரம்  அருகே நாகக்கோடு பகுதியை ேசர்ந்தவர் சுஜா (45). இவரது மகள் சென்னையில்  படித்து வருகிறார். விடுமுறை முடிந்த நிலையில் மகளை சென்னைக்கு  அனுப்ப வேண்டியிருந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் சுஜா மகளை ஸ்கூட்டரில் நாகர்கோவிலுக்கு  அழைத்து வந்தார். பின்னர் பஸ்சில் வழியனுப்பி வைத்தார்.அதன்பின்  சுஜா ஊருக்கு  புறப்பட்டார். இரவு சுமார் 9.30 மணியளவில் குலசேகரம்  அருகே மலவிளை பகுதியில் வந்தபோது, பைக்கில் ஹெல்மெட் அணிந்தபடி  ஒருவர் பின்தொடர்ந்தார். சிறிது நேரத்தில் அந்த நபர் சுஜாவின் ஸ்கூட்டரை உரசிய படி முந்தி  சென்றார். இதில் நிலைதடுமாறி சுஜா கீழே விழுந்தார். உடனே  சுஜாவின் கழுத்தில் கிடந்த நான்கரை பவுன் செயினை மர்மநபர் பறித்து சென்றார்.

இதனிடையே  இவரது கூச்சல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இருப்பினும்  இரவுநேரம் என்பதால் மர்மநபர் எந்த திசையில் சென்றார் என்பது தெரியவில்லை.  இதுதொடர்பாக சுஜா குலசேகரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடம்  வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு  கேமராவை ஆய்வு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால்  குலசேகரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: