புதுக்கடை,பிப்.21: குமரியில் பிரசித்திபெற்ற சிவாலய ஓட்டம் நேற்று தொடங்கியது.குமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு விளவங்கோடு, கல்குளம் தாலுகா பகுதிகளில் உள்ள பிரசித்தி பெற்ற 12 சிவாலயங்களை பக்தர்கள் மாலை அணிந்து, நோன்பு இருந்து ஓடியும், நடந்தும் சென்று தரிசிக்கும் நிகழ்ச்சி பாரம்பரியமாக நடந்து வருகிறது. அதன்படி முதல் சிவாலயமான புதுக்கடை அருகே முஞ்சிறை திருமலை மகாதேவர் ஆலயத்தில் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் குவிய தொடங்கினர்.
பக்தர்கள் காவி வேட்டி மட்டும் அணிந்து, இடுப்பில் துண்டு, கையில் வசிறி, சுருக்கு பையில் விபூதி ஆகியவற்றுடன் முன்சிறையில் உள்ள திருமலை மகாதேவரை தரிசித்த பிறகு பூசாரி வழங்கும் விபூதியை பெற்று, ‘கோவிந்தா... கோபாலா...’ என்ற கோஷமிட்டவாறு நடக்க தொடங்கினார்கள்.இதையடுத்து பக்தர்கள் திக்குறிச்சி மகாதேவர் கோயில், திற்பரப்பு வீரபத்திரர் கோயில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோயில், பொன்மனை தீம்பிலாங்குடி மகாதேவர் கோயில், பந்நிப்பாகம் சந்திர மவுலீஸ்வரர் கோயில், கல்குளம் நீலகண்ட சுவாமி கோயில், மேலாங்கோடு காலகாலர் கோயில், திருவிடைக்கோடு சடையப்ப நாதர் கோயில், திருவிதாங்கோடு மகாதேவர் கோயில், திருப்பன்றிகோடு மகாதேவர் கோயில், நட்டாலம் சங்கர நாராயணனார் கோயில் ஆகிய கோயில்களை பகல் மற்றும் இரவில் சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தை ஓடியும், நடந்தும் சென்று தரிசிக்கின்றனர்.