குடியுரிமை திருத்த சட்ட போராட்டம் எதிரொலி தியாகராஜ சுவாமி கோயிலில் 3 வாசல்கள் அடைப்பு

திருவாரூர், பிப்.20: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் கடந்த 5 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள 3 கோபுர வாசல்களையும் திறந்து விட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜசுவாமி கோயிலானது சைவசமயத்தின் தலைமைபீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாகவும், சமய குறவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் இருந்து வருகிறது. மேலும் இக்கோயிலின் மூலவராக வன்மீகநாதரும், உற்சவராக தியாகராஜரும் இருந்து வரும் நிலையில், இக்கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. கோயிலின் விழாக்களில் பங்குனி உத்திர விழாவானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டமும் அதன் பின்னர் கோயிலின் மேற்கு புறத்தில் உள்ள கமலாலய குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைப்பெறுவது வழக்கம். அதன்படி ந்டப்பாண்டு விழாவிற்கான கொடியேற்றும் நிகழ்ச்சி அடுத்த மாதம் 11ம் தேதி நடைபெறுகிறது.இந்நிலையில் இந்த ஆழித்தேரோட்டம் மற்றும் தெப்ப திருவிழாவின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது மட்டுமின்றி சாதாரணமாகவே தினந்தோறும் உள்ளுர் மற்றும் வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதுமட்டுமன்றி உள்ளூர் பக்தர்கள் அனைவரும் அதிகாலை 5.30 மணி அளவிலேயே தியாகராஜ பெருமானை தரிசிப்பதற்காக இந்த கோயிலுக்கு வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

அவ்வாறு வரும் பக்தர்கள் கோயிலின் கிழக்கு மற்றும் மேற்கு வடக்கு ,தெற்கு மற்றும் விட்ட வாசல் என 5 கோபுர வாசல் வழியாக கோவிலுக்குள் சென்று வருவர். மேலும் சாமி தரிசனத்திற்காக வரும் பக்தர்களில் பெரும்பாலானவர்கள் கோயில் பிரகாரங்களை சுற்றி நடைப்பயிற்சியில் ஈடுபடுவதும் வழக்கமாக இருந்துவருகிறது. இந்நிலையில் கடந்த 15ம் தேதி முதல் இந்த கோயிலில் கிழக்கு மற்றும் மேற்கு கோபுரங்களை தவிர மீதமுள்ள 3 கோபுர வாசல் கதவுகளும் நேற்று வரையில் முழுமையாக அடைக்கப்பட்டு 5 நாட்களாக திறக்கப்படாததால் வழக்கமாக இந்த கோபுரவாசல் களைப் பயன்படுத்தி வந்த பக்தர்கள் உள்ளே செல்ல முடியாமல் மிகவும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே அனைத்து கோபுர வாசல்கள் வழியாகவும் பக்தர்கள் சென்று வரும் வகையில் பூட்டப்பட்டுள்ள கதவுகளை திறந்து விடவேண்டும் என கோயில் நிர்வாகத்திற்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து கோவில் நிர்வாகத்திடம் கேட்டபோது கடந்த 14ம் தேதி சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற தடியடி சம்பவத்திற்கு பின்னர் மறுநாள் 15ம் தேதி முதல் இந்த கோயிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கிழக்கு மற்றும் மேற்கு கோபுர வாசல்களில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வரும் நிலையில், மேற்கு கோபுர வாசலருகே மெட்டல் டிடெக்டர் வைத்து சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் பாதுகாப்பு கருதி போலீசாரின் அறிவுரைப்படி வடக்கு, தெற்கு மற்றும் விட்ட வாசல் கோபுர கதவுகள் பூட்டப்பட்டு உள்ளன என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories: