அரூர், பிப்.20: அரூர் அருகே பைக் மீது கருங்கல் ஏற்றி வந்த டிப்பர் லாரி மோதிய விபத்தில், பிஇ பட்டதாரி மற்றும் அவரது நண்பர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த எலவடை கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் மகன் சிங்காரவேலன்(23). இவரது நண்பரான அதே ஊரைச்சேர்ந்த மாது மகன் அசோக்குமார்(23). இவர் பிஇ படித்து விட்டு வேலை தேடி வந்தார். இந்நிலையில், சிங்காரவேலன் நேற்று மாலை 4 மணியளவில் சொந்த வேலை காரணமாக, அசோக்குமாருடன் தனது பைக்கில் அரூர் சென்றுள்ளார். பைக்கை சிங்காரவேலன் ஓட்டிச்சென்றார். மெரப்பூர் - அரூர் ரோட்டில் மோபிரிப்பட்டிபுதூர் தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது, எதிரே கருங்கல் ஏற்றி வந்த டிப்பர் லாரி, பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சிங்காரவேலன் மற்றும் அசோக்குமார், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.