தர்மபுரி, பிப்.20: தர்மபுரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தோப்புகளில், மாமரங்களில் தற்போது பூக்கள் பூத்து குலுங்குகின்றன. தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, காரிமங்கலம், பாலக்கோடு, மொரப்பூர், அரூர் ஒன்றியங்களில் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் மாமரங்களை வளர்த்து வருகின்றனர். பருவமழை நன்கு பெய்ததால் நீர்நிலைகளில் தண்ணீர் உள்ளது. இதனால் அன்னசாகரம், வெங்கட்டம்பட்டி, சோகத்தூர், ஆட்டுக்காரம்பட்டி, பாப்பிநாயக்கனஅள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் 100க்கணக்கான ஏக்கரில் உள்ள மாமரங்களில் தற்போது பூக்கள் பூத்து குலுங்குகின்றன. பெரும்பாலான மரங்களில் மாம்பிஞ்சு விட தொடங்கியுள்ளன. கடந்தாண்டு மாங்காய் விளைச்சல் குறைந்தோடு, சுவையும் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. ஆனால், நடப்பாண்டில் நல்ல மழை பெய்து மாம்பூக்கள் அதிகளவில் பிடித்துள்ளது. சூறைக்காற்று, கோடை மழை, நோய் தாக்குதல் இல்லாவிட்டால் மாங்காய் விளைச்சல் அதிகரிக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.