வேப்பங்குப்பம் அருகே ஆம்புலன்ஸ் வாகனத்தில் கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது

வேலூர், பிப்.20:வேப்பங்குப்பம் அருகே ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவமனைக்கு சென்ற கர்ப்பிணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.வேப்பங்கும் அருகே பாலம்பட்டு மலை கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி(28), கூலிதொழிலாளி. இவரது மனைவி அம்பிகா(25). நிறைமாத கர்ப்பிணியான அம்பிகா வேப்பங்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் அம்பிகா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்காக சென்றார்.அப்போது அம்பிகாவிற்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் வேப்பங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விரைந்தது. அங்கு பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த அம்பிகாவை ஏற்றிக்கொண்டு வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.

கங்காநல்லூர் அருகே வந்தபோது அம்பிகாவிற்கு பிரசவ வலி மீண்டும் அதிகரித்தது. இதையடுத்து மருத்துவ உதவியாளர் சிந்துஜா அம்பிகாவிற்கு பிரசவம் பார்த்தார். சில நிமிடங்களில் அம்பிகாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தாய், சேய் இருவருக்கும் முதலுதவி சிகிச்சைகள் அளித்து வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். அங்கிருந்த டாக்டர்கள் உடனடியாக இருவருக்கும் தீவிர மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டனர். அதில் குழந்தை 2 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக இருப்பதாகவும், தாய் அம்பிகா நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

Related Stories: