தனியார் வணிக வளாத்தில் லிப்டில் சிக்கிய தம்பதி மீட்பு

மதுராந்தகம், ஜன.29: மதுராந்தகம் அடுத்த மாமண்டூரில் சென்னை - திருச்சி தேசி நெடுஞ்சாலையை ஒட்டி திரையரங்கத்துடன் கூடிய வணிக வளாகம் அமைந்துள்ளது. இதில் 3 திரையரங்குகள், உணவகம், வணிக வளாகங்கள் உள்பட பல்வேறு வசதிகள் உள்ளன. 4 மாடிகளுக்கு லிப்ட் வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இங்கு சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். பலர் திரைப்படம் பார்ப்பதற்காகவும், சிலர் பொழுதுபோக்குக்காகவும்  இந்த வணிக வளாகத்துக்கு வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் இருந்து ஒரு தம்பதியினர், நேற்று மேற்கண்ட வணிக வளாகத்துக்கு வந்தனர். அவர்கள், லிப்டில் ஏறி மாடிக்கு சென்றனர். அப்போது, திடீரென லிப்ட் பழுதாகி நின்றது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள், அலறி கூச்சலிட்டனர். இதை பார்த்ததும், அங்கிருந்த பொதுமக்கள், வணிக வளாக நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, பழுதான லிப்ட்டினை பொறியாளர்களின் துணையோடு சரி செய்து அவர்களை பத்திரமாக மீட்டனர். சுமார் அரை மணிநேர போராட்டத்துக்கு பின், மீட்கப்பட்ட அந்த தம்பதினரை தடுமாற்றத்துடன்  தீயணைப்பு துறையினர் அழைத்து  வந்தனர்.

Related Stories: