தினமும் தாமதமாக வருவதை கண்டித்து அரசு பஸ்சை சிறை பிடித்து பள்ளி மாணவர்கள் சாலை மறியல்: மதுராந்தகம் அருகே பரபரப்பு

மதுராந்தகம், ஜன. 29: மதுராந்தகம் அருகே அரசு பஸ்சை சிறை பிடித்து, பள்ளி மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மதுராந்தகம் அருகே அச்சிறுப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அரசு நடுநிலைப்பள்ளியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். செய்யூரில் இருந்து நேமம் வழியாக காட்டுக் கூடலூர் வரை அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் மூலம் நேமம் கிராமத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். ஆனால், கடந்த சில நாட்களாக குறித்த நேரத்துக்கு பஸ், காட்டுக் கூடலூர் கிராமம் வழியாக செல்வதில்லை என கூறப்படுகிறது. இதனால், பள்ளி மாணவர்கள், சரியான நேரத்துக்கு பள்ளிக்கு செல்ல முடியாமல், கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை பள்ளி மாணவர்கள், பஸ்சுக்காக காத்திருந்தனர். ஆனால், வழக்கமாக 9 மணிக்கு நேமம் கிராமத்துக்கு வரவேண்டிய அரசு பஸ் 9.30 மணிக்கு வந்தது. இதனால், ஆத்திரமடைந்த பள்ளி மாணவ, மாணவிகள் அரசு பஸ்சை சிறைபிடித்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து அச்சிறுப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மாணவ, மாணவிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, முறையாக அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: