புதுக்கோட்டையில் கள்ள நோட்டு மாற்ற முயன்றவர் கைது

புதுக்கோட்டை, ஜன.29:புதுக்கோட்டையில் கள்ள நோட்டுகள் மாற்ற முயன்றவர் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த காசிநாதன் மகன் வேலு (50). இவர் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு பழக்கடையில் பழங்கள் வாங்கியுள்ளார். பின்னர் வாங்கிய பழங்களுக்கு ரூ.2 ஆயிரம் நோட்டை கொடுத்தார். அந்த ரூபாய் நோட்டை வாங்கி பழக்கடையின் உரிமையாளர் மதுபாலன் வாங்கி சோதனை செய்தார். அப்போது அந்த ரூபாய் நோட்டு கள்ள நோட்டாக இருந்ததால் சந்தேகத்தின் அடிப்படையில் வேலுவை பிடித்து புதுக்கோட்டை டவுன் போலீசில் ஒப்படைத்தார். இதையடுத்து டவுன் இன்ஸ்பெக்டர் வாசுதேவன், வேலுவிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் வேலு கள்ளநோட்டை மாற்ற முயன்றது தெரியவந்தது. இதையடுத்து வேலுவை கைது செய்த இன்ஸ்பெக்டர் அவரிடம் இருந்து ரூ.2 ஆயிரம் கள்ளநோட்டுகள் 2, ரூ.100 கள்ளநோட்டுகள் 80 மற்றும் ரூ.50 கள்ளநோட்டுகள் 31 என ரூ.13 ஆயிரத்து 550 மதிப்பலான கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: