பொன்னமராவதி, ஜன.29: பொன்னமராவதியில் இருந்து சீனாவில் ஆராய்ச்சி படிக்கும் மாணவர்களை கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மீட்டுவர அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னமராவதியில் உள்ள வலையபட்டியைச்சேர்ந்த சின்னையா என்பவரது மகன்ஸ்ரீபன்(34). இவர் சீனாவில் ஆராய்ச்சிப்படிப்பு படித்து வருகின்றார். இந்த நிலையில் அங்கு கொரோனா வைரஸ் பரவி வருவதால் இந்தியாவைச் சேர்ந்தவர்களை பாதுகாப்பாக சொந்த நாட்டிற்கு அழைத்துவர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகின்றது. இந்த நிலையில் ஸ்ரீபன் சீனாவின் உகான் பகுதியில் நானோ டெக்னாலஜி ஆராய்ச்சிப்படிப்பாக கடந்த டிசம்பர் 6ம் தேதி சென்றுள்ளார். இந்த நிலையில் அந்த நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிக அளவில் உள்ளதால் ஸ்ரீபனை பத்திரமாக மீட்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவரது குடும்பத்தினர் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.