ஆவடி, ஜன.29: ஆவடி அடுத்த அயப்பாக்கம் ஊராட்சி இ-சேவை மையம் இல்லாததால் மக்கள் அம்பத்தூர் அல்லது ஆவடிக்கு செல்லும் அவலநிலை உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு காலவிரயமும், பண விரயமும் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். தமிழகத்தில் அதிக பரப்பளவு கொண்ட ஊராட்சி ஆவடி அடுத்த அயப்பாக்கம். இங்கு சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் பூர்வீக கிராமம் உள்ளது. இங்கு சுமார் 1.25லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இங்கே 35க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். மேற்கண்ட ஊராட்சியில் இதுவரை இ சேவை மையம் அமைக்கவில்லை. இதனால், மேற்கண்ட பகுதியில் குடியிப்புவாசிகள் சாதி, இருப்பிடம், வருமானம், வாரிசு, விதவை, மறுமணம், தொலைந்த சான்றிதழ், பட்டா, பட்டா பெயர் மாற்றம், சொத்து மதிப்பு உள்ளிட்டவைகளை பெறுவதற்கு பதிவு செய்ய அம்பத்தூர் அல்லது ஆவடி பகுதிகளுக்கு செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.