காரைக்குடி, ஜன.29: காரைக்குடி பகுதியில் நிலத்தின் மதிப்பு உயர்ந்து வருவதை தொடர்ந்து போலி பட்டா தயார் செய்து நிலத்தை மோசடி செய்யும் கும்பல் அதிகரித்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி நகராட்சி பகுதி வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. சென்னை, மதுரை, கோவை போன்ற மெட்ரோ சிட்டிக்கு இணையாக நிலத்தின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்குள்ள சூடாமணிபுரம், குறிஞ்சிபுரவு, சுப்பிரமணியபுரம், செக்காலை ரோடு போன்ற பகுதிகளின் நில மதிப்பு மிகவும் அதிகமாக உயர்ந்து வருகிறது. நிலத்தின் மதிப்பு உயர்ந்து வருவதால் சும்மா கிடக்கும் இடங்களை குறிவைத்து போலி பட்டா மாறுதல் உத்தரவு தயார் செய்து நிலமாசடி மன்னர்கள் வில்லங்கத்தை போட்டு அதில் காசு பார்த்து வருகின்றனர். நிலமோசடி மன்னர்கள் சொத்துக்கு உரியவர்கள் இறந்து விட்டால். அந்த சொத்தின் வாரிசுகளுக்கு தெரியாமல் சொத்துக்கு உரியவர் கிரயம் செய்து தந்தது போல் இறந்தவர்களின் கையெழுத்தை போலியாக பேட்டு உள்நாட்டு பத்திரம் தயார் செய்து விடுகின்றனர். பின்னர் ஓய்வு பெற்ற முன்னாள் தாசில்தார்கள் பெயரில் போலி கையெழுத்து, போலி அரசு முத்திரை வைத்து போலியாக பட்டா மாறுதல் உத்தரவு தயார் செய்து விடுகின்றனர். பின்னர் இதனை அதிகம் பத்திரப்பதிவு நடக்காத ஒரு பத்திரப்பதிவு அலுவலகத்தில் அடமானம் வைத்தது போல் பதிவு செய்து சொத்தில் வில்லங்கம் இருப்பது போல் பதிவு செய்து விடுகின்றனர்.