சிவகங்கை, ஜன. 29: கம்பன் நினைவிடம் செல்லும் சாலை பல ஆண்டுகளாய் குண்டும் குழியுமாய் உள்ளதால் வாகனஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையிலிருந்து கருதுப்பட்டி, கண்டனிப்பட்டி வழியே காளையார்கோவில் செல்லும் சாலை உள்ளது. நாட்டரசன்கோட்டையிலிருந்து கண்டனிப்பட்டி வரை சுமார் 4 கி.மீ தூரம் செல்லும் இந்த சாலை பின்னர் தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் இணையும். நாட்டரசன்கோட்டை வழியே காளையார்கோவில் செல்லும் 100க்கும் மேற்பட்ட கிராமத்தினர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். 4 கி.மீ தூரமுள்ள இந்த சாலை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. மண் சாலையாக இருந்து முதன்முறையாக தார்ச்சாலையாக மாற்றப்பட்ட பின்னர் எவ்வித பராமரிப்பும் செய்யாமல் விடப்பட்டுள்ளது. நாட்டரசன்கோட்டையிலிருந்து சுமார் 1 கி.மீ தூரத்தில் உள்ள கம்பன் நினைவிடத்திற்கு இந்த சாலை வழி தான் செல்ல வேண்டும். கம்பன் நினைவிடத்திற்கு சிறிது தூரம் முன்வரை நாட்டரசன்கோட்டை பேரூராட்சி சாலையாகவும், எஞ்சிய 3 கி.மீ தூரம் காளையார்கோவில் யூனியன் சாலையாகவும் உள்ளது.