யூரியா கலந்த தண்ணீரை குடித்த 17 ஆடுகள், ஒரு மாடு சாவு உசிலம்பட்டி அருகே சோகம்

உசிலம்பட்டி, ஜன. 29: உசிலம்பட்டி அருகே, யூரியா கலந்த தண்ணீரை குடித்த 17 ஆடுகள், ஒரு மாடு பரிதாபமாக இறந்தன. உசிலம்பட்டி அருகே உள்ள உத்தப்பநாயக்கனூர் குளத்துப்பட்டியைச் சேர்ந்தவர் பெருமான் மகன் ஜெயபிரகாஷ் (35). இவர், 50க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை ஆடுகளை மேய்ச்சலுக்காக ஜெயப்பிரகாஷ் ஓட்டிச் சென்றார். மதிய வேளையில் ஆடுகளை வீட்டிற்கு ஓட்டி வந்தார். அப்போது வெயிலில் களைப்பாக வந்த ஆடுகள் வீட்டில் வாளி மற்றும் சட்டியில் இருந்த தண்ணீரை குடித்துள்ளன. சிறிது நேரத்தில் 17 ஆடுகள் ஒவ்வொன்றாக மயங்கி விழுந்தன. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஜெயப்பிரகாஷ், அந்த வழியாக மாடு பிடித்துச் சென்ற அதே ஊரைச் சேர்ந்த அய்யர் மகன் ராமுவை (63) அழைத்து காண்பித்தார். அப்பொது ராமுவின் மாடுவும் வாளியில் இருந்த தண்ணீரை குடித்து மயங்கி விழுந்தது. உடனே வாளி மற்றும் சட்டியில் இருந்த தண்ணீரை கொட்டினர். அப்போதுதான் தண்ணீரில் யூரியா கலக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. மயங்கி விழுந்த 17 ஆடுகளும், மாடுவும் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தன. தண்ணீரை கீழே கொட்டியதால் மற்ற ஆடுகள் தப்பித்தன.இது குறித்து ஜெயப்பிரகாஷ் கொடுத்த புகாரின்பேரில், உத்தப்பநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிந்து, தண்ணீரில் யூரியாவை கலந்தது யார் என விசாரித்து வருகின்றனர். உசிலம்பட்டி தாசில்தார் செந்தாமரை இறந்த ஆடுகள் மற்றும் மாட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: