கன்னியாகுமரி,ஜன.29: குமரியை சேர்ந்த பட்டதாரி வாலிபர், தேசத்தின் கலாச்சாரம், ஆரோக்கியத்தை வலியுறுத்தி காஷ்மீரில் தொடங்கிய விழிப்புணர்வு சைக்கிள் பயணம் கன்னியாகுமரியில் நிறைவடைந்தது. சிதறாலை சேர்ந்தவர் தஜ் விஜயன் (31). எம்எஸ்ஸி பட்டதாரி. நாகர்கோவிலில் சுய தொழில் செய்து வருகிறார். தேசத்தின் உணவு மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றின் பன்முகத்தன்மையை சீர்படுத்தவும், உடற்பயிற்சி, ஆரோக்கியம் ஆகியவற்றை வலியுறுத்தி பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இளைய தலைமுறையினருக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் வகையிலும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சுமார் 4000 கிலோமீட்டர் சைக்கிளில் பயணம் செய்தார். இந்த சைக்கிள் பயணத்தை நேற்று கன்னியாகுமரியில் நிறைவு செய்தார். இதையடுத்து அவரது நண்பர்கள், உறவினர்கள், பொது மக்கள், சுற்றுலா பயணிகள் அவருக்கு பூச்செண்டு, இனிப்பு கொடுத்து வரவேற்றனர்.