குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடைகளிலும் பொருட்கள் பெறும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்

தூத்துக்குடி, ஜன.29:  தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் தமிழகஅரசின் உள்மாநில பெயர்வு திறன் திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் பரிட்சார்த்த முறையில் செயல்படுத்துவது தொடர்பாக கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசியதாவது: தமிழக அரசு பொதுமக்களின் வசதிக்கேற்ப தற்காலிகமாக செல்லும் பகுதிகளிலும் எந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் முகவரி மாற்றாமலேயே உணவு பொருட்கள் வாங்கும் திட்டத்தினை செயல்படுத்த முன்னோடியாக உள்மாநில பெயர்வு திறன் திட்டம் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் பரிட்சார்த்த முறையில் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் 2 மாவட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் ஒரே வருவாய் வட்ட பகுதியிலும், ஒரே வார்டு பகுதியிலும் உள்ள கடைகளில் தவிர மற்ற எந்த தேவையான ரேஷன் கடைகளிலும் பொருட்களை வாங்கி கொள்ளலாம்.

  தூத்துக்குடி மாவட்டத்தில் வெளி மாவட்டத்தவர் மற்றும் வெளிமாநிலத்தவர் தற்காலிக அடிப்படையில் பணியாற்றக்கூடிய இடங்களை கண்டறிந்து கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக கட்டுமான தொழில் நடைபெறும் பகுதிகள், மீனவர்கள், உப்பளங்கள், நூற்பாலைகள், தீப்பெட்டி தொழிற்சாலைகள், செங்கல் சூளைகள் உள்ளிட்ட வெளிமாவட்டத்தினர் வந்து பணிபுரியும் இடங்களை கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும்.  தூத்துக்குடி மாவட்டத்தில் முழுநேர மற்றும் பகுதிநேர நியாய விலைக்கடைகள் 957 செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 4,93,842 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். ரேஷன் கடைகளில் இத்திட்டத்தை செயல்படுத்த தேவையான இணையதள வசதிகள் உள்ளதா? என்பதை ஆய்வு செய்து அப்பகுதியில் உள்ள இணையதள கோப்பினை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இத்திட்டம் பிப்ரவரி 1 முதல் செயல்படுத்தப்பட உள்ளதால் இத்திட்டம் குறித்து நியாய விலை கடை பணியாளர்களுக்கு உடன் கூட்டம் நடத்த பயிற்சி அளிக்க வேண்டும். இத்திட்டத்தினை முன்னோடி திட்டமாக நமது மாவட்டத்தில் செயல்படுத்துவதால் சம்பந்தப்பட்ட துறையினர் அதிக அக்கறையுடன் எந்த ஒரு குறைபாடும் இன்றி சிறப்பாக செயல்படுத்திட தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.  கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணு சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் அமுதா, பொது விநியோக திட்ட மண்டல மேலாளர் சிவசந்திரன், துணை இயக்குநர் (பொது விநியோக திட்டம்) ரவிசந்திரன் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள், கூட்டுறவு சார்பதிவாளர்கள், பகுதி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: