தூத்துக்குடி, ஜன.29: தூத்துக்குடி தருவை மைதானத்தில் புதிய செயற்கை இழை டென்னிஸ் மைதானங்கள் திறப்பு விழா மற்றும் மாநில அளவிலான புதிய விளையாட்டு டேக்வாண்டோ போட்டி துவக்க விழா கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமையில் நடந்தது. விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு, மாவட்ட நலக்குழு நிதி மூலம் ரூ.52.30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை இழை டென்னிஸ் மைதானத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து தூத்துக்குடி தருவை மைதானத்தில் டேக்வாண்டோ போட்டியை அமைச்சர் கடம்பூர் ராஜு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:தூத்துக்குடி தருவை மைதானத்தில் தலா ரூ.26.15 லட்சம் மதிப்பில் 2 டென்னிஸ் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. தருவைகுளம் விளையாட்டு மைதானம் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் அமைச்சராக இருந்தபோது ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்து நிறைவேற்றப்பட்ட திட்டம் ஆகும். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது விளையாட்டு துறைக்கு ஆக்கமும், ஊக்கமும் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். இவ்வாறு அவர் பேசினார்.