நாங்குநேரி, ஜன. 29: தெய்வநாயகப்பேரி சாலைப் பழுதால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். நாங்குநேரி ஒன்றியம் மலையன்குளத்தில் இருந்து தெய்வநாயகப்பேரிக்கு செல்லும் சுமார் 4 கிமீ தார் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. பல இடங்களில் தார் சாலைக்கான சுவடே தெரியாமல் சிதிலமடைந்துள்ளது. இதனால் இவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர கால ஊர்திகளும் வேகமாக வர முடிவதில்லை. அடிக்கடி இச்சாலையில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகியும், பழுதடைந்தும் விடுகின்றன. எனவே இந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.