நாங்குநேரி, ஜன. 29: நாங்குநேரி பஸ் ஸ்டாண்டில் மூடப்பட்டிருக்கும் அம்மா குடிநீர் விற்பனை நிலையத்தில் பாம்புகள் தங்கி உள்ளதாக பயணிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். நாங்குநேரி பஸ் ஸ்டாண்டில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அம்மா குடிநீர் பாட்டில்கள் விற்பனைக்காக புதிய பெட்டிக்கடை அமைக்கப்பட்டது. தற்போது விற்பனை இல்லாததால் பல மாதங்களாக கடை பூட்டியே கிடக்கிறது. இதனால் அருகிலுள்ள முட்புதர்களில் இருந்து பாம்புகள் உள்ளிட்ட விஷஜந்துகள் பெட்டிக்கடைக்குள் தஞ்சமடைந்து உள்ளதாக பயணிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதனால் கடை அருகில் செல்லவே மக்கள் அஞ்சுகின்றனர். எனவே நாங்குநேரி பஸ் ஸ்டாண்டில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் அம்மா குடிநீர் பெட்டிக்கடையை அகற்ற நடவடிக்கை வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.