வேலூர், ஜன.29: வேலூர் அடுத்த கம்மவான்பேட்டையில் ராணுவவீரர்களுக்கான போர் நினைவுச்சின்னம் அமைக்க இடம் தேர்வு செய்து டிஆர்ஓ பார்த்தீபன், தாசில்தார் சரவணமுத்து ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.ஆங்கிலேயர்களுக்கு எதிராக வேலூர் கோட்டையில் 1806-ஆம் ஆண்டு இந்திய சிப்பாய்கள் நடத்திய ஆயுதப்புரட்சியே நாட்டின் முதல் சுதந்திரப்போராட்டத்திற்கு வித்திட்டதாகும். இப்படி பெருமைவாய்ந்த வேலூர் மாவட்டத்தில், தமிழகத்திலேயே அதிக அளவில் ராணுவத்துக்கு இளைஞர்களை அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்திய ராணுவத்தில் தற்போது பணிபுரிபவர்களில் சுமார் 25 ஆயிரம் பேர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இதில் 4 தலைமுறைகளாக அதிகளவில் ராணுவத்திற்கு வீரர்களை அனுப்பியது ராணுவப்பேட்டை என்று அழைக்கப்படும் கம்மவான்பேட்டை கிராமம் தான் என்று ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.