கிருஷ்ணகிரி, ஜன.29: கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரியில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான தொழில்நெறி வழி காட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நேற்று நடந்தது. நிகழ்ச்சிகளுக்கு கல்லூரி முதல்வர் (பொ) பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் முன்னிலை வகித்தார். பேராசிரியர் வெங்கடேஸ்வரன் வரவேற்றார். கண்காட்சி மற்றும் கருத்தரங்கை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசுகையில், தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறது. கல்லூரி பருவத்தில் மாணவ, மாணவிகள் அறம் சார்ந்த கல்வியை கற்க வேண்டும். போட்டி தேர்வுகளை எதிர் கொள்ள திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுவதற்காக கண்காட்சி மற்றும் பயிற்சி வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.