அவிநாசி, ஜன.29: அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற விண்ணப்பங்கள் பெறுவதற்காக சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொ) ஜெயப்பிரகாஷ் தலைமை தாங்கினார். அவிநாசி ஒன்றிய ஆனையாளர் அரிகரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொது) தவமணி, வருவாய் ஆய்வாளர் ஈசுவரமூர்த்தி, வருவாய் இளநிலை அலுவலர் மனோகரன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இதில் 205 மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பூர்த்தி செய்யபப்ட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
இது குறித்து மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் கூறுகையில், நேற்று (இன்று) நடந்த மாற்றுத்திறனாளி சிறப்பு முகாமில் மாவட்டம் முழுவதும் 920 பேரிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதேபோல, இன்று 29ம் தேதி காங்கயம், பல்லடம், பொங்கலூர் ஆகிய பகுதிகளிலும், 30ம் தேதி தாராபுரம், குண்டடம், மூலனூர் ஆகிய பகுதிகளிலும், 31ம் தேதி மடத்துக்குளம், உடுமலை, குடிமங்கலம் ஆகிய ஊர்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையை பெற விண்ணப்பங்களை வழங்கி பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார். முகாம் ஏற்பாடுகளை, வட்டார வள மைய மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுநர்கள், அவிநாசி ஒன்றிய சிறப்பு ஆசிரியர்கள் செய்திருந்தனர்.