உடுமலை, ஜன.29: மடத்துக்குளம் வேளாண்மை உதவி இயக்குநர் ராஜேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டாரத்தில் 5 ஆயிரம் ஏக்கரில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தென்னையை 800க்கும் மேற்பட்ட பூச்சிகள் தாக்கினாலும், சமீப காலமாக அமெரிக்காவின் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களினால் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள தோப்புகளில் எல்லாம் வெள்ளை ஈ தாக்குதல் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான பூச்சிகள் தாவரங்களை கடித்து சாப்பிடும் புழுக்கள் ஆகும். ஆனால் இந்த வகை பூச்சியானது சாறு உறிஞ்சும் பூச்சியாகும். இதன் வாய் ஊசி போன்று இருக்கும். இது தென்னை இலையின் பச்சையம் முழுவதையும் உறிஞ்சி உண்ணும் தன்மை கொண்டது. இதனால் தென்னை மரங்கள் மகசூல் இழப்பிற்கு ஆளாகின்றன. இது முட்டைகளை சுருள் சுருளாக வைக்கும். லேசான மஞ்சள் கலரில் இருக்கும். இதன் மேல் மெழுகு போன்ற பூச்சு இருக்கும். இதுவே, இதன் தாக்குதலுக்கு அறிகுறியாகும். இலையின் அடிப்பாகத்தில் இது இருக்கும்.