குன்னூர்,ஜன.29: குன்னூர் அருகே சோலாடா மட்டம் மற்றும் கோடமலை கிராமம் உள்ளது. இந்த இரண்டு கிராமத்தில் சுமார் 700க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் தேயிலை தோட்டங்களில் கூலி வேலை செய்து வருகின்றனர். கடந்த எட்டு ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லாமல் பாதிப்படைந்து வருகின்றனர். இந்த பகுதியை சுற்றி தேயிலை தோட்டங்கள் மற்றும் வனப்பகுதி அதிகம் உள்ளதால் இரவு நேரங்களில் வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருகின்றன. மேலும் அடிப்படை வசதிகளான குடிநீர், தெரு விளக்குகள், மற்றும் சாலை வசதி இல்லாமல் தவிக்கும் நிலை உள்ளது. இந்த பகுதியில் கடந்த எட்டு ஆண்டுகளாக சாலை சீரமைக்காததால் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.