உப்பாற்றில் ஆகாயதாமரைகளை அகற்ற கோரிக்கை

பொள்ளாச்சி, ஜன.29: பொள்ளாச்சியை அடுத்த உப்பாற்றில் மீண்டும் ஆகாயதாமரை படர்ந்துள்ளது. இதை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொள்ளாச்சி அருகே ஆழியார் ஆறு செல்லும் வழித்தடமான மயிலாடுதுறை, ஆனைமலை, அம்பராம்பாளையம் மற்றும் ஆத்துப்பொள்ளாச்சி பகுதிகளில் அவ்வபோது ஆகாயதாமரை படர்ந்திருப்பதை காணமுடிகிறது. இதில், அதிகப்படியாக ஆனைமலையையொட்டி செல்லும் ஆழியாறு மற்றும் உப்பாற்றில் ஆகாயதாமரை படர்கிறது. இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, சுமார் 2 ஆண்டுகளுக்கு  முன்பு, ஆழியார் மற்றும் உப்பாற்றில் ஆங்காங்கே தேங்கி இருந்த ஆகாயதாமரைகளை அப்புறப்படுத்தும் பணி நடந்தது.

இப்பணி சுமார் இரண்டு வாரமாக தொடர்ந்து நடந்தது. இதனால், பல மாதமாக ஆழியாற்றில் ஆகாயதாமரை குறைவாக காணப்பட்டது. ஆனால், கடந்த சில மாதமாக  ஆகாயதாமரை மீண்டும் படர்ந்துள்ளது.

தற்போது, ஆழியார் மற்றும் உப்பாறு சந்திக்கும் பகுதியில் மீண்டும் ஆகாயதாமரை படர்ந்துள்ளதால், கொசு உற்பத்தி அதிகரிப்பதுடன். கழிவு பொருட்கள்  தேங்கி சுகாதார சீர்கேடு உண்டாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில், தண்ணீரை மறைத்து ஆகாய தாமரை படர்வதற்குள், முழுமையாக அப்புறப்படுத்த சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: