அரசு பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்

திட்டக்குடி, ஜன. 29:  திட்டக்குடி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் ரமாமணி தலைமை தாங்கினார். நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசும் போது மாணவ-மாணவிகள் இன்று வாகனம் அதிகரித்துள்ள நிலையில் சாலை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும், சாலை வகைப்பாடு குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும், சாலையை கடக்கும் போது சாலையின் ஓரமாக செல்ல வேண்டும், பேருந்துகளில் படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்,  மாணவிகள் ஆகிய நீங்கள் உங்களது பெற்றோர்களிடம் வாகனம் ஓட்டும் போது தலைக்கவசம் கட்டாயம் அணிவது குறித்து அறிவுறுத்த வேண்டும் உட்பட பல்வேறு சாலை விதிமுறைகள் குறித்து பேசினார்.

திட்டக்குடி சப்-இன்ஸ்பெக்டர் சுபிக் ஷா கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் உதவி தலைமையாசிரியர் காமராஜ், கோமதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீரசேகரன், ஆசிரியர்கள், நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள், மாணவிகள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: