திருச்செந்தூர், ஜன.28: ஆலந்தலையில் கனிமொழி எம்பி தனது தொகுதி நிதியில் கட்டப்பட்ட மீன் வலை கூடத்தை திறந்துவைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். திருச்செந்தூர் பேரூராட்சியை சேர்ந்த ஆலந்தலை மீனவ மக்களின் கோரிக்கையின் பேரில் தூத்துக்குடி தொகுதி எம்பி கனிமொழி தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இதனையடுத்து ஆலந்தலையில் கட்டப்பட்ட மீன்பிடி வலை கூடத்தினை திறந்துவைத்த கனிமொழி எம்பி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சிக்கு அனிதாராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமை வகித்தார். ஆலந்தலை பங்கு தந்தை ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். இதனைத்தொடர்ந்து கடந்த 6ம் தேதி திருச்செந்தூர்-குலசை சாலையில் நடந்த விபத்தில் பலியான ஆலந்தலை வடக்கு தெரு சேவியர் மகன் இருதயராஜ் மற்றும் விபத்தில் படுகாயமடைந்த இதேபகுதியை சேர்ந்த எமல்சன் மகன் பிரைட்லின் ஆகியோர் குடும்பத்திற்கு அனிதாராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தனது சொந்த நிதியில் கொடுத்த தலா ஒரு லட்சம் ரூபாயை கனிமொழி எம்பி வழங்கினார்.