கொசு ஒழிப்பு பணியாளர்கள் சம்பளம் பிடித்தம்: முறையீடு

விழுப்புரம், ஜன. 28:     விழுப்புரம் நகராட்சி கொசுஒழிப்பு பணியாளர்களின் சம்பளம் பிடித்தம் தொடர்பாக ஆட்சியரிடம் மனு அளித்தனர். விழுப்புரம் நகராட்சியில் கொசுஒழிப்பு பணியாளர்களாக பணியாற்றி வந்த 30க்கும் மேற்பட்டவர்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் கொசுஒழிப்பு பணியாளர்களாக கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வந்தோம். சுமார் 80 பேர் இப்பணியில் ஈடுபட்டு வந்தனர். நாளொன்றுக்கு ரூ.275 வீதம் கணக்கிட்டு மாத முடிவில் சம்பளம் கொடுக்கும் போது ரூ.1000 பிடித்தம் செய்கின்றனர். எங்களின் சம்பளத்தை இரண்டு ஆண்டுகளாக பிடித்து முறைகேடு செய்துள்ளனர். ஏற்கனவே ஆட்சியரிடம் புகார் கொடுத்ததால் அந்தநபரை நீக்கி விட்டு வேறு நபர்களை நியமிக்கின்றனர். எனவே ஆட்சியர் நடவடிக்கை எடுத்து உரிய சம்பளம் வழங்கிடவும், வேலையிலிருந்து நீக்கியவர்களுக்கு மீண்டும் பணி வழங்கிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: