சிதம்பரம், ஜன. 28: சிதம்பரத்தை அடுத்த மணலூரில் மத்திய அரசின் சேமிப்பு கிடங்கு நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்திற்கு ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ரயில்களில் அரிசி மூட்டைகள் வரும். ரயில் நிலையத்திலிருந்து இந்த அரிசி மூட்டைகள் லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு மணலூரில் உள்ள மத்திய சேமிப்புக் கிடங்கில் வைத்து பாதுகாக்கப்படும். இந்நிலையில் நேற்று சிதம்பரம் ரயில் நிலையத்திலிருந்து பல்வேறு லாரிகளில் அரிசி மூட்டைகள் ஏற்றிச் செல்லப்பட்டது. சில லாரிகளில் ஏற்றப்பட்ட அரிசி மூட்டைகளில் இருந்த அரிசி சாலை முழுவதும் கீழே கொட்டியபடியே சென்றது. இதைப் பார்த்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் லாரியை நிறுத்தி டிரைவரிடம் கூறியுள்ளனர். ஆனால் லாரி டிரைவரோ கடமைக்கு அரிசி மூட்டையை சரி செய்துவிட்டு அலட்சியப்படுத்திவிட்டு லாரியை வேகமாக ஓட்டிச் சென்றார்.