சிதம்பரம், ஜன. 28: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவரும், மொழிப் போராட்ட தியாகியுமான ராஜேந்திரனின் சிலை சிதம்பரத்தை அடுத்த அண்ணாமலைநகரில் உள்ளது. இவர் உயிர் நீத்த நாள் நேற்றைய தினம் ஆகும். இதையடுத்து தமிழ்ப் பேரரசு கட்சியின் தலைவரும், பிரபல திரைப்பட இயக்குனருமான கவுதமன் நேற்று சிதம்பரம் வந்தார். பின்னர் தனது கட்சி நிர்வாகிகளுடன் அண்ணாமலைநகருக்கு சென்று அங்குள்ள ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஆளும் அதிகார வர்க்கம் தமிழ் மொழியை அழிக்க காரணமாக இருக்கிறது. அரசு பள்ளியில் தமிழ் வழிக் கல்வி இல்லை. இதற்கு இந்திய அரசுதான் காரணம். தமிழக அரசும் இந்த மொழியை அழிப்பதற்கு துணை போகிறது. தஞ்சை கோயிலில் தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கும். சிதம்பரம் நடராஜர் கோயில் உள்ளிட்ட தமிழ் மன்னர்கள் கட்டிய அனைத்து கோயில்களிலும் தமிழிலேயே அர்ச்சனை நடத்த வேண்டும். எங்கள் இனம், மொழி அழிக்கப்பட்டால் இன்னும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராக இருக்கிறோம்.