கடலூர், ஜன. 28: கடலூரிலிருந்து சிதம்பரம் வழியாக திருவாரூர் வரை மின்சார ரயில் சேவை விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக திருவாரூரிலிருந்து சிதம்பரம் வழியாக கடலூருக்கு மின்சார ரயில் இன்ஜின் மட்டும் சோதனைக்காக ஓட்டி செல்லப்பட்டது. விழுப்புரம்- திருவாரூர் இடையே ரயில் பாதை மின் பாதையாக மாற்றி அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பாதை மாற்றி அமைக்கப்படும் நிலையில் மின்சார ரயில் கடலூர் மார்க்கமாக விழுப்புரம் - திருவாரூர் இடையே இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டம் விரைவில் பயணிகளுக்காக பயன்பாட்டில் வரவுள்ளது. இதைத்தொடர்ந்து முதல் கட்டமாக விழுப்புரம் -கடலூர் இடையே மின்பாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு அதற்கான சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது. இதில் கடலூர்- விழுப்புரம் ரயில்வே மின் பாதை திட்டம் முழுமை பெற்ற நிலையில், இரண்டாம் கட்டமாக கடலூரில் இருந்து திருவாரூருக்கு ரயில்வே பாதை மின் பாதையாக மாற்றி அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.