தேனி, ஜன.28: தேனி கால்நடைத்துறையில் மூன்று மாதங்களாக கால்நடை இணை இயக்குனர் நியமிக்கப்படாததால் இத்துறை சார்ந்த பணிகளில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்ட கால்நடைத்துறையில் தற்போது விவசாயிகளுக்கு விலையில்லா ஆடு வழங்கும் திட்டம், கோழி வழங்கும் திட்டங்கள் மும்முரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தவிர கால்நடை மருந்தகங்களை நிர்வகித்தல், மற்றும் பசும்புல் வளர்த்தல், தடுப்பூசி போடுதல் என ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோடை தொடங்கி உள்ள நிலையில் ஆடு, மாடுகளுக்கு கோடை நோய்கள் தாக்கும் வாய்ப்புகள் உள்ளது. மாவட்டத்தில் பசுந்தீவன பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. தவிர மாவட்டத்தில் ஆடு, மாடு, கோழி வளர்ப்பு பெருமளவில் குறைந்து வருகிறது. இதனை ஊக்குவிக்கவும் அரசு தனித்தனியே ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது இத்திட்டப்பணிகளில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது.