தனியார் பள்ளியில் 3 மாதமாக சம்பளம் நிலுவை கலெக்டர் அலுவலகத்தை ஆசிரியர்கள் முற்றுகை நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தனர்

மதுரை, ஜன. 28: தனியார் பள்ளியில் 3 மாதமாக சம்பளம் வழங்காததால், நடவடிக்கை எடுக்கக்கோரி ஆசிரியர்கள், ஊழியர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை திருநகரில் உள்ள தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் ஆசிரியர்கள், அலுவலர்கள், ஊழியர்கள், உள்ளிட்ட 60க்கும் மேற்ப்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். பள்ளியின் நிர்வாகிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கடந்த 3 மாதமாக ஆசிரியர்கள், அலுவலர்கள், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இவர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, கலெக்டர் வினயிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

பள்ளியில் நிர்வாக பிரச்னையால், கடந்த 3 மாதமாக சம்பளமும், 5 மாதமாக பி.எப் தொகையும் வழங்கப்படவில்லை. இதனால், எங்கள் குடும்பம் அடிப்படை வாழ்வாதாரத்திற்காக போராடுகிறோம். கடன் வாங்கி குடும்பம் நடத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். பிப்ரவரியில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு துவங்க உள்ளதால், மாணவர்கள் நலனில் அக்கறைக் கொண்டு, அவர்கள் படிப்பு பாதிக்காத வகையில் பாடம் எடுத்து வருகிறோம். நிர்வாக பிரச்னைக்காக எங்களின் குடும்ப வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, சம்பளத்தை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர் விசாரித்து, நடவடிக்கை எடுக்க கலெக்டர் பரிந்துரை செய்தார். இதனைத்தொடர்ந்து, ஆசிரியர்களிடம் முதன்மைக் கல்வி அலுவலகத்தில், மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார்.

Related Stories: