புதுக்கோட்டை, ஜன.28: புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் காவலன் செயலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக காவல்துறை பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்கவும், அதில் இருந்து பெண்களை பாதுகாக்கவும் சமீபத்தில் காவலன் என்ற செயலியை உருவாக்கியது. இந்த காவலன் செயலி குறித்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை போலீசார் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி புதுக்கோட்டையில் உள்ள ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூர்விகா கலந்து கொண்டு, காவலன் செயலி என்றால் என்ன?, அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும். அதன் நன்மை என்ன என்பதை விளக்கி பேசினார். தொடர்ந்து மாணவிகளுக்கு காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.