கந்தர்வகோட்டை, ஜன.28: கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை மூலம் நடைபெற்ற தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 36 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான அறிமுக கூட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர்கள் அறிமுக கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் ரெத்தினவேல் (எ) கார்த்திக் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ் மற்றும் குமரன், துணை தலைவர் செந்தாமரைகுமார் முன்னிலை வகித்தனர். 36 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ஒன்றியக்குழு தலைவர் கார்த்திக் சால்வை அணிவித்து மரியாதை செய்தார். கூட்டத்தில் மூத்த தலைவர்கள் பரமசிவம், நாராயணசாமி ஆகியோர் தலைவர்கள் நடந்து கொள்ளும் முறைகளை விளக்கி கூறினர். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) குமரன் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டதில் சிலர் ஏற்கனவே தலைவர்களாக வெற்றி பெற்றுள்ளனர்.