கோவை, ஜன.28: கோவை நகரில் விதிமுறை மீறல் கட்டிடங்கள் அதிகமாகி வருகிறது. அடுக்குமாடி வணிக கட்டிடங்களின் முறைகேடுகளை தடுக்க மாநகராட்சி, திட்ட குழுமம் தயக்கம் காட்டி வருகிறது. கோவை நகரில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் உள்ளன. இதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடுக்குமாடி கட்டிடங்கள் இருக்கிறது. கடந்த 10 ஆண்டிற்கு மேலாக அடுக்குமாடி, வணிக கட்டிடங்கள் விதிமுறை மீறி கட்டுவது பரவலாக அதிகமாகி விட்டது. நகரில் விதிமுறை மீறல் கட்டிடங்களை கண்டறிய மாநகராட்சி, உள்ளூர் திட்ட குழுமத்தினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. புவியியல் தகவல் அமைப்பின் படி (ஜி.ஐ.எஸ்.) நகரில் கட்டிடங்களின் விவரங்களை பதிவு செய்ய மாநகராட்சி சார்பில் தனியார் நிறுவனத்திடம் பணி ஒப்படைக்கப்பட்டது. ஆனால் இந்த கணக்கெடுப்பு பணி முறையாக நடக்கவில்லை. இரு முறை சர்வே எடுத்து நிராகரிக்கப்பட்டது. மீண்டும் சர்வே ஜி.ஐ.எஸ். சர்வே நடக்கவில்லை. நகரின் கட்டிட விவரங்கள் ‘ஆன்லைன்’ மயமாக்கும் திட்டம் முடங்கி கிடக்கிறது. கடந்த 2008ம் ஆண்டில் ஆட்டோ டி.சி.ஆர். என்ற ஆன்லைன் கட்டிட வரைவு அனுமதி பெறும் திட்டம் மாநகராட்சியில் துவங்கியது. இதிலும் பெரும் குளறுபடி நீடிக்கிறது. அடுக்குமாடி கட்டிட அனுமதி விண்ணப்பங்களுக்கு 30 நாளில் முடிவு தெரிவிக்கவேண்டும். வரைவு ஏற்பு அல்லது நிராகரிப்பு, அதற்கான காரணங்களை விளக்கவேண்டும் என உத்தரவு உள்ளது. ஆனால் ஒரு ஆண்டிற்கு மேலாக கட்டிட வரைவு அனுமதி வழங்கும் விண்ணப்பங்களை காத்திருப்பில் வைப்பது வாடிக்கையாகி விட்டது. புரோக்கர்கள் மூலமாக வரும் விண்ணப்பங்கள் மட்டுமே நகரமைப்பு பிரிவில் நகர்வதாக சர்வேயர்கள் புலம்புகின்றனர்.