நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பால் மழை பெய்தும் வறண்டு கிடக்கும் சோகத்தூர் ஏரி

தர்மபுரி, ஜன.28: நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பால், மழை பெய்தும் சோகத்தூர் ஏரி வறண்டு கிடக்கிறது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.  தர்மபுரி மாவட்டத்தில் 926 ஏரிகள், 5,301 கிணறுகள், 5 ஆயிரம் ஆழ்துளை கிணறுகள் உள்ளன. பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் ராமாக்காள், செட்டிக்கரை, ரெட்ரி, நார்த்தம்பட்டி, லளிகம், பாப்பாரப்பட்டி, பைசுஅள்ளி, சோகத்தூர் உள்பட 73 ஏரிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் 634 ஏரி, குளங்களும் உள்ளன. தர்மபுரியில் சராசரியாக 760 மி.மீ மழை பெய்கிறது. நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை பெய்ததால் ஏரி, குளங்கள், விவசாய கிணறுகள், அணைகள் நிரம்பியது. ராமாக்காள் ஏரி, கோவிலூர் ஏரி உள்ளிட்ட ஏரிகள் இன்னும் வற்றாமல் உள்ளது. ஆனால், தர்மபுரி-பென்னாகரம் சாலையில் உள்ள சோகத்தூர் ஏரி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூர்வாரப்பட்டது. மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தும், நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பால், சோகத்தூர் ஏரி தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது. இதன் காரணமாக, இப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகள் வறண்டு காணப்படுகிறது. எனவே, ஏரிக்கு நீர்வரும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர்வரத்து கால்வாயை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: