மார்த்தாண்டம், ஜன.28: தேசியசாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி மினி பஸ் ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு சாலை பாதுகாப்பு, விதிமுறைகளை மதித்து விபத்தில்லாமல் வாகனம் ஓட்டுவது குறித்த விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் தக்கலையில் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் சுந்தர்ராஜ் தலைமை வகித்தார். செயலாளர் டேவிட் முன்னிலை வகித்தார். விழாவில் தக்கலை டிஎஸ்பி ராமசந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:- தமிழகத்தில் குமரி மாவட்டம் அதிக கல்வியறிவு பெற்ற மாவட்டமாக விளங்குகிறது. ஆனால் இவ்வளவு கல்வியறிவு கொண்ட மாவட்டத்தில் ஆண்டுதோறும் விபத்தில் உயிரிழப்பு அதிகம் ஏற்ப்பட்டு வருவது கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது. போக்குவரத்து விதிமுறை மீறல்கள், அஜாக்கிரதை, அதிக வேகம், குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் இருப்பது போன்ற காரணங்களால் கடந்த ஆண்டு மட்டும் 1,402 பேர் படுகாயமடைந்துள்ளனர். 211 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் இளைஞர்கள் 56 சதவீதம் உயிரிழந்திருப்பது கவலைதரும் விஷயமாக உள்ளது.