புதுச்சேரி, டிச. 5: புதுச்சேரியில் ஊர்க்காவல் படையினர் 900க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். போலீசாரோடு இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். போலீசார் செய்யும் அனைத்து பணிகளையும் ஊர்க்காவல் படை வீரர்களை ஈடுபடுத்தி வருகின்றனர். அவர்களுக்கு மதிப்பூதியமாக ஒரு நாளைக்கு ரூ. 791 வழங்கப்படுகிறது. அதன்படி சராசரியாக மாதத்துக்கு 15 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.24 ஆயிரம் ஊதியம் பெறுகின்றனர். இந்நிலையில் பட்ஜெட்டில் ஊர்க்காவல் படையினருக்கு ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்பட்டதாக தெரிகிறது.
ஒவ்வொரு மாதமும் போலீசாருக்கு சம்பளம் வழங்கும் அதே நாளில் இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் 4ம் தேதியை கடந்தும் ஊதியம் வழங்கப்படவில்லை. இதனையடுத்து ஊர்க்காவல் படையினர், முதல்வரை சந்திக்க, சட்டசபைக்கு வந்தனர். முதல்வர் அறுவை சிகிச்சை மேற்கொண்டு வீட்டில் ஓய்வில் இருக்கிறார்.