கடன் தொல்லையால் விரக்தி ரியல் எஸ்டேட் பிரமுகர் தூக்கில் தற்கொலை

புதுச்சேரி, டிச. 5: முதலியார்பேட்டையில் கடன் தொல்லையால் விரக்தியடைந்த ரியல் எஸ்டேட் பிரமுகர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்தார். புதுவை, முதலியார்பேட்டை, எம்ஜிஆர் நகர், 4வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் பாபு (40). ரியல் எஸ்டேட் பிரமுகர். இவருக்கு ரேகா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். பாபு தொழில் நிமித்தமாக சிலரிடம் கடன் வாங்கியிருந்தாராம். ஆனால் வாங்கிய கடனை உரிய காலத்தில் அவரால் திருப்பி கொடுக்க முடியாத நிலையில் கடன் கொடுத்தவர்கள் வீடு தேடி வரத் தொடங்கினர்.

இதனால் நெருக்கடி அதிகமாகி சில நாட்களாக பாபு மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளர். நேற்று முன்தினம் மனைவி வேலைக்கு சென்ற நிலையில், குழந்தைகளும் பள்ளிக்கு சென்று விட்டதால் வீட்டில் தனியாக இருந்த பாபு தனது அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்தார். நீண்டநேரமாகியும் கணவர் செல்போனை எடுக்காததால் வேலைக்கு சென்றிருந்த மனைவி, சந்தேகத்தின் பேரில் அங்கு வந்து பார்த்தபோது கணவர் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து கதறி அழுதார். இதுகுறித்து ரேகா அளித்த புகாரின்பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: