ராஜபாளையம், டிச. 5: நெற்பயிரில் குலைநோயை கட்டுப்படுத்த வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையா ஆலோசனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: ராஜபாளையம் வட்டாரத்தில் தற்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. தொடர்மழை, தூறல், அதிகமாக தழைச்சத்து பயன்படுத்துவதால், நெற்பயிரில் குலைநோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்புண்டு. இதன் அறிகுறிகள் வருமாறு: நெற்பயிரின் இலைகள், தண்டு, கணுப்பகுதி, கழுத்துப்பகுதி, கதிர் ஆகியவை பூசணத்தால் தாக்கப்பட்டிருக்கும். இலைகளின் மேல் வெண்மை நிறத்திலிருந்து சாம்பல் நிற மையப்பகுதியுடன் காய்ந்த ஓரங்களுடன் கூடிய, கண் வடிவ புள்ளிகள் காணப்படும். பல புள்ளிகள் ஒன்று சேர்ந்து பெரிய ஒழுங்கற்ற திட்டுக்களை உருவாக்கும். தீவிர தாக்குதலின்போது, பயிர் முழுவதும் எரிந்தது போல இருக்கும்.